வைகாசி விசாகத் திருவிழாவுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்த அரசுத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மே 16) நடைபெறுகிறது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற மே 18ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிப்பி கூடத்தில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. பக்தர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.