தூத்துக்குடி மாவட்டத்தில் கருப்புக்கட்டி விலை தொடர்ந்து உயர்ந்து, இப்போது கிலோ ரூ. 350-க்கு விற்பனையாகிறது.
கருப்புக்கட்டி உற்பத்திக்கு பெயர்பெற்றது தூத்துக்குடி மாவட்டம். இங்குள்ள உடன்குடி, வேம்பார் பகுதிகளில் அதிக அளவு கருப்புக்கட்டி உற்பத்தியாகி, நாட்டின் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சர்க்கரை பயன்பாடு காரணமாக கருப்புக்கட்டி மீது மக்களின் நாட்டம் குறைந்திருந்தது. ஆனால், கருப்புக்கட்டியின் நன்மைகள், இயற்கைக்கு மாறி வரும் சூழல் ஆகிய காரணங்களால் கருப்புக்கட்டி மீது மக்களின் நாட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேநேரம், பனைமரங்கள் அழிப்பு போன்றவற்றால் பனைத் தொழிலின் வளர்ச்சி பாதிப்படைந்து, கருப்புக்கட்டி உற்பத்தி பன்மடங்கு குறைந்தது. இதனால், கருப்புக்கட்டி கடுமையான விலையேற்றத்தை சந்தித்து வருகிறது.
கடந்த வாரம் கிலோ ரூ. 330 வரை விற்பனையான கருப்புக்கட்டி, இப்போது ரூ. 350-க்கு விற்பனையாகிறது.
உடன்குடி கருப்புக்கட்டி 10 கிலோ சிப்பம் ரூ. 3,300 முதல் ரூ. 3,400 வரை, இடத்துக்கேற்ப போக்குவரத்துச் செலவு சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது. வேம்பார் கருப்புக்கட்டி ரூ. 3,060 முதல் ரூ. 3,150 வரை விற்பனையாகிறது. சீசன் நேரத்தில் பதநீரை கருப்புக்கட்டி உற்பத்திக்குப் பயன்படுத்தாமல், பனங்கற்கண்டு உற்பத்திக்கு பயன்படுத்தியதால், கருப்புக்கட்டி உற்பத்தி பெரும் சரிவைச் சந்தித்து, இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது. போதிய இருப்பு இல்லாததன் காரணமாக கருப்புக்கட்டி விலை மேலும் உயரும் என, விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.