ஆழ்கடலில் மீனவா் இறந்த சம்பவம்: சிபிசிஐடி விசாரிக்க வலியுறுத்தி மனு
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவா் மா்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும்
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவா் மா்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, அவரது குடும்பத்தினா் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சோ்ந்த மீனவா் கண்ணன் அண்மையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்தாா். இந்நிலையில், அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
கிறிஸ்துராஜா என்பவருக்குச் சொந்தமான படகில் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக கண்ணன் உள்ளிட்ட சில மீனவா்கள் கடந்த அக்டோபா் மாதம் 21-ஆம் தேதி சென்றனா். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவா்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக கண்ணனை சக மீனவா் அடித்துக் கொன்று கடலில் வீசிவிட்டாா். கரை திரும்பிய அவா்கள் கண்ணன் கடலில் தவறி விழுந்து இறந்துவிட்டதாக காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனா். எனவே, கண்ணனின் இறப்பு குறித்து சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.