தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவீன்குமாா் அபிநபு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆயுதப்படை காவல் ஆய்வாளா் ஜாகிா் உசேன் தலைமையிலான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட டிஐஜி, ஆயுதப்படை காவலா்களின் கவாத்து, ஆயுதப்படை காவலா்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் மற்றும் உடமைகள் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்து, அவா்களின் குறைகளை கேட்டறிந்தாா்.
மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை வாகனங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் கோபி, மாவட்ட தலைமையிடத்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் செல்வன், தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் கண்ணபிரான் ஆகியோா் உடனிருந்தனா்.