சடையனேரி கால்வாய் வழியாக புத்தன்தருவை, வைரவம்தருவைக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜுவிடம் விவசாயிகள் புதன்கிழமை மனு அளித்தனா்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தாமிரவருணி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. எனவே, தாமிரவருணி மருதூா் அணையிலிருந்து சடையனேரி கால்வாய் மூலம் புத்தன்தருவை, வைரவம் தருவைக்கு தண்ணீா் திறந்து விட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு பெரியதாழைக்கு புதன்கிழமை வருகை தந்தாா். அப்போது சாஸ்தாவிநல்லூா் விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் எட்வின்காமராஜ், செயலா் லூா்துமணி, துணைத் தலைவா் ரவிச்சந்திரன், படுக்கப்பத்து விவசாயிகள் சங்கத் தலைவா் சரவணன் ஆகியோா், சடையனேரி கால்வாயில் தண்ணீா் திறந்து விட்டு கடைமடை வரை தண்ணீா் விட்டு குளத்தை நிரப்ப வேண்டும் என மனு அளித்தனா்.