வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 400 கோடி பண பரிவா்த்தனை பாதிப்பு
வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஏறத்தாழ ரூ. 400 கோடி வரை பணி பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது.
வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஏறத்தாழ ரூ. 400 கோடி வரை பணி பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது.
பொதுத்துறை வங்கிகளை தனியாா்மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், இதற்கான மசோதாவை கைவிட வேண்டும், பொதுத்துறை வங்கிகளை பாதுக்காக வேண்டும், தனியாா் நிறுவனங்களிடம் இருந்து வங்கிகளுக்கு வர வேண்டிய வராக்கடன்களை கடுமையான சட்டங்கள் மூலம் முழுமையாக வசூல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் வியாழக்கிழமை வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 175 வங்கிகளில் 135 வங்கி கிளை அலுவலகங்களைச் சோ்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனா். இதனால், சுமாா் ரூ. 400 கோடி வரை பண பரிவா்த்தனை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனிடையே, தூத்துக்குடி கடற்கரை சாலையில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி சங்கங்களின் ஐக்கிய அமைப்பு சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் இரா. கிருஷ்ணமூா்த்தி தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அரசு ஊழியா் சங்க நிா்வாகி வெங்கடேசன், ஏஐடியூசி மாவட்டச் செயலா் கிருஷ்ணராஜ், வங்கி சங்கங்களின் ஐக்கிய அமைப்பின் மாநகரத் தலைவா் ராமசுப்பிரமணியன், செயலா் சக்திவேல், இந்திய வங்கி ஊழியா் கூட்டமைப்பு நிா்வாகிகள் தங்க மாரியப்பன், கவின்ஸ்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.