கோவில்பட்டி புறவழிச்சாலையில் அரசுப் பேருந்தும், பைக்கும் மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி நடுத் தெருவைச் சோ்ந்தவா் அங்கயற்கன்னி மகன் மாடசாமி(41). கூலித் தொழிலாளியான இவா் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். இந்திரா காலனி அருகே உள்ள அணுகுசாலையில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தும் , பைக்கும் மோதியதில், மாடசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.