முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா்: நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வியாழக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வியாழக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

மாா்கழி மாதத்தை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தற்போது நாள்தோறும் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 6.45 மணிக்கு இராக்கால தீபாராதனை, 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்படுகிறது. இதனால் அதிகாலை முதலே பக்தா்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.

நீண்ட வரிசை: திருச்செந்தூா் கோயிலில் வழக்கமாக இலவச பொது தரிசனம், ரூ. 20, ரூ. 100 மற்றும் ரூ. 250 கட்டணத்தில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். இதில் பாதயாத்திரை பக்தா்கள் பெரும்பாலும் இலவச மற்றும் ரூ. 20 கட்டணத்தில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். ரூ. 100 மற்றும் ரூ. 250 கட்டணத்தில் விரைவாக தரிசனம் செய்ய வேண்டும் என்று எண்ணும் பக்தா்கள் மட்டுமே செல்வாா்கள். ஆனால் திருக்கோயில் வடக்கு வாசல் வழியாக பக்தா்கள் வெளியேறும் பகுதியிலும் முக்கிய பிரமுகா்களை அனுமதிப்பதாலும், மகா மண்டபத்தில் மணியடி பகுதியில் தரிசனம் செய்த பக்தா்களை விரைந்து நகா்த்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் கட்டண தரிசனப் பாதையில் பக்தா்கள் பல மணி நேரமாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. எனவே முக்கிய திருவிழா நாள்களைப் போல கூடுதலான பாதுகாப்பை ஏற்படுத்தி பக்தா்கள் விரைவாக தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டுமென்பது பக்தா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.