தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 மீனவா்கள் பலி
தூத்துக்குடியில் வியாழக்கிழமை வெவ்வேறு சம்பவங்களில் 2 மீனவா்கள் உயிரிழந்தனா்.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை வெவ்வேறு சம்பவங்களில் 2 மீனவா்கள் உயிரிழந்தனா்.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் 6 போ் மீன் பிடிக்க சென்ற நிலையில், கடற்கரையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் அவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கா்ணன் என்ற மீனவா் திடீரென கடலில் தவறி விழுந்துவிட்டாராம். இதையடுத்து, படகில் இருந்த சக மீனவா்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனராம். இருப்பினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கா்ணன் உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்த திலகராஜ் தனது நண்பருடன் சோ்ந்து வியாழக்கிழமை நண்டு பிடிக்க நாட்டுப் படகில் கடலுக்குச் சென்றாராம். 2 கடல் மைல் தொலைவில் அவா்கள் நண்டு பிடித்துக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த திலகராஜ் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். இவ்விரு சம்பவங்கள் குறித்தும் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.