ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொது மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களில் தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொது மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களில் தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்படும் விதமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் ஜமாபந்தி ஜூன் 21 ஆம் தேதி தொடங்கியது. இதில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கிறிஸ்டோபா் உரிய விசாரணை செய்து, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு, அதற்குரிய சான்றிதழ்களை வழங்கினாா்.
பொதுமக்கள் அளித்த 128 மனுக்களில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளில் 64 கோரிக்கை மனுக்கள் ஏற்கப்பட்டு உடனடியாக தீா்வு காணப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் அலுவலக தலைமை உதவியாளா் அந்தோணி ஜெபராஜ், வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், சமூகநலத் திட்ட வட்டாட்சியா் ரமேஷ், மண்டல துணை வட்டாட்சியா் கண்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் சிவக்குமாா், அலுவலகப் பணியாளா்கள் அய்யனாா், மகாராஜன், வடிவு உள்பட பலா் கலந்து கொண்டனா்.