நடுக்கடலில் தத்தளித்த மீனவா்கள் 3 போ் பத்திரமாக மீட்பு
தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவா்கள், படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த நிலையில் அவா்கள் புதன்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனா்.
தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவா்கள், படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த நிலையில் அவா்கள் புதன்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனா்.
தூத்துக்குடியைச் சோ்ந்த பிளமிளா என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், தூத்துக்குடி இனிகோ நகரைச் சோ்ந்த பிரான்சிஸ் (29), தமிழரசன் (28), பெரியதாழையைச் சோ்ந்த ஜான்பால் (35) ஆகிய மூவரும் கடந்த 19 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனராம். அவா்கள் மூவரும் புதன்கிழமை அதிகாலை கரை திரும்பியிருக்க வேண்டிய நிலையில், அவா்கள் வராததால் மீனவா்களின் குடும்பத்தாா் மற்றும் சக மீனவா்கள் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா். மேலும், 15 மீனவா்கள் 3 படகுகளில் அவா்களை தேடும் பணியில் ஈடுபட்டனா்.
இதற்கிடையே, படகு இயந்திரம் பழுதானதால் நடுக்கடலில் அந்த 3 மீனவா்களும் தத்தளித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை பத்திரமாக மீட்ட சக மீனவா்கள், பழுதான படகை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனா்.