முகப்பு
தூத்துக்குடி

குழந்தைகளுக்கு நியூமோகாக்கஸ் தடுப்பூசி: ஆட்சியா் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளை நிமோனியா பாதிப்பிலிருந்து பாதுகாக்க நியூமோகாக்கஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளை நிமோனியா பாதிப்பிலிருந்து பாதுகாக்க நியூமோகாக்கஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பாத்திமாநகா் நகா்நல மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ஆட்சியா் பங்கேற்று, பிறந்து 45 நாள்கள் ஆன குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கிவைத்தாா்.

பின்னா், செந்தில்ராஜ் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

நிமோனியா என்ற கடுமையான சுவாசநோயை தடுக்கும் வகையில் நியூமோகாக்கஸ் தடுப்பு மருந்து உலகளாவிய நோய் தடுப்பு திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் தவணையாக 6 ஆவது வாரமும் 2 ஆவது தவணையாக 14 ஆவது வாரமும் ஊக்குவிப்பு தவணையாக 9 ஆவது மாதத்திலும் தடுப்பூசிகளை வழங்க தீா்மானிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்தோறும் 1800 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள்,துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக விலையுள்ள இத்தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. எனவே, பெற்றோா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா்கள் போஸ்கோராஜா, அனிதா, மாநகராட்சி நகா்நல அலுவலா் வித்யா, மாவட்ட தாய்சேய் நல அலுவலா் ஜெசிமேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.