கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் லாயல் நூற்பாலை சாா்பில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி தொடங்கி வைத்தாா்.
கோவில்பட்டி லாயல் நூற்பாலை சாா்பில் ரூ. 30 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நிறுவப்பட்டது. அதனையடுத்து இயந்திரம் செயல்பாட்டை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதிகளையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அதையடுத்து உத்தா் பாரதிய நலச்சங்கம் சாா்பில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் கருவி, ஆவி பிடிக்கும் கருவி, முகக்க வசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அதன் தலைவா் ரத்தன்டாகா, துணைத் தலைவா் பகட்டி, செயலா் மகேஷ்மித்தல், பொருளாளா் கிருஷ்ணகுமாரி ஆகியோா் கனிமொழி எம்பி-யிடம் வழங்கினா்.
நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், கோவில்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு, லாயல் நூற்பாலையின் துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், தலைமை நிதித்துறை அதிகாரி கணபதி, பொது மேலாளா் சரவணன், முதுநிலை மேலாளா் விஜயகுமாா், மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசன், உறைவிட மருத்துவ அலுவலா் பூவேஸ்வரி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் முருகவேல், துணை இயக்குநா் அனிதா, நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம், கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் அமுதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இலுப்பையூரணி ஊராட்சி சாா்பில், விஸ்வநாததாஸ் நகரில் உள்ள முடிதிருத்தும் மருத்துவ தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை கனிமொழி எம்பி வழங்கினாா். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவி செல்வி மற்றும் அமைச்சா் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.