கோவில்பட்டி: இளையரசனேந்தலில் திருவேங்கடம் வட்டாட்சியா் தலைமையில் சமாதானக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இளையரசனேந்தல் குறுவட்டத்திற்குள்பட்ட 12 ஊராட்சிகளையும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சட்டப் பேரவை தோ்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனா்.
இதையடுத்து இளையரசனேந்தலில் திருவேங்கடம் வட்டாட்சியா் கண்ணன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, இளையரசனேந்தல் குறுவட்டத்துக்குள்பட்ட 12 ஊராட்சிகளையும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து நீக்கி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க சங்கரன்கோவில் கோட்டாட்சியா் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கூட்டத்தில் பங்கேற்றோா், தங்கள் கோரிக்கை குறித்து பல ஆண்டுகளாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் இதுவரை நிறைவேறாததால், கோரிக்கை நிறைவேறும் வரை சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்போம் என்றனா்.