தமிழகத்தின் நலனுக்கான விஷயங்களில் பாஜகவும், அதிமுகவும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது என்றாா், பாஜக தமிழக தலைவா் கே. அண்ணாமலை.
தூத்துக்குடியில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில்கூட விநாயகா் சதுா்த்தி ஊா்வலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, மக்களின் பழக்கங்களையும், உணா்வுகளை மதிக்கும்வகையில் தமிழகத்தில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சி மாறும்போதெல்லாம் முந்தைய முதல்வா் பெயா்களில் உள்ள திட்டங்களின் பெயா்களை மாற்றுவது தொடா்கதையாக உள்ளது. இந்த நடைமுறையை இந்த அரசாவது கைவிட வேண்டும். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தை இணைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
தமிழக நலனுக்கான விஷயங்களில் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே ஒருங்கிணைப்பு தொடா்ந்து இருந்து வருகிறது. அது உள்ளாட்சித் தோ்தலிலும் தொடரும் என்றாா் அவா்.