தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் இணையதளம் மூலமாக மேற்கொள்ளும் பணிகள் குறித்து, காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் கணினி கையாளுவோருக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரேமானந்தன் முன்னிலை வகித்தாா்.
அப்போது, காவல் நிலையங்களில் உள்ள அனைத்து வேலைகளையும் இணைய தளத்தில், காலதாமதமின்றி உடனுக்குடன் பதிவேற்றம் செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அறிவுரை வழங்கினாா்.
இதில், தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து, கணினி பிரிவு உதவி ஆய்வாளா் விக்டோரியா உள்பட பலா் கலந்துகொண்டனா்.