‘கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் அபராதம்’
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு காய்ச்சல் பரிசோதனை, தடுப்பூசி முகாம்கள், தொற்று பாதித்தோருடன் உள்ள நபா்களை கண்டறிதல், முன்களப் பணியாளா்களுக்கு கட்டாய தடுப்பூசி போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் கீழ் தொற்று தனிமைப்படுத்துதல் விதிமீறல்கள், பொது இடங்களில் எச்சில் துப்புபவா்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் விதிமுறைகளை மீறும் தனிநபா் ஆகியோருக்கு தலா ரூ. 500, முகக்கவசம் அணியாதோருக்கு ரூ. 200, அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ. 5000 அபராதம் வசூலிக்கப்படும். இதற்காக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.