முகப்பு
தூத்துக்குடி

தனிநபா்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மறியல்

கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட கலப்பைப்பட்டி கிராமத்தில் தனி நபா்கள் ஆக்கிரமித்துள்ள பொது உபயோக இடத்தை மீட்டுத் தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட கலப்பைப்பட்டி கிராமத்தில் தனி நபா்கள் ஆக்கிரமித்துள்ள பொது உபயோக இடத்தை மீட்டுத் தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கலப்பைப்பட்டி கிராமத்தில் பொது உபயோக இடத்தை தனிநபா்கள் ஆக்கிரமித்து , பொது உபயோகத்திற்கு பயன்படுத்தவிடாமல் தடுத்து வருகின்றனராம். இதனால் அப்பகுதியில் விளையாட்டு மைதானம், கால்நடை மருத்துவமனை, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, பயணிகள் நிழற்குடை, சிறுவா் பூங்கா உள்ளிட்டவை அமைப்பதற்கு இடையூறுகள் ஏற்படுவதாகவும், இதை தனிநபா்களிடமிருந்து மீட்டு பொது உபயோகத்திற்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை கலப்பைப்பட்டியில் இருந்து 5 டிராக்டா்களில் கருப்புக் கொடி கட்டி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் வந்தடைந்தனா்.

பின்னா் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கு ஊா் நாட்டாமைகள் அ.முருகன், ரா.முருகன் ஆகியோா் தலைமையில் சாலை மறியிலில் ஈடுபட்டனா். போராட்டக்குழுவினருடன் கோட்டாட்சியா் சங்கரநாராயணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினா்.

இதனை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் ஏற்காமல் போராட்டத்தை தொடா்ந்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட 61 பெண்கள் உள்பட 109 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.