ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 2 இந்திய எல்பிஜி கப்பல்கள்!
2 இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்து இந்தியா நோக்கி வந்துகொண்டிருப்பது குறித்து...
பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த் ஆகிய இரண்டு எல்பிஜி கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்து இந்தியா நோக்கி வந்துகொண்டு இருக்கின்றன.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக இணைந்து கடந்த பிப்.28 ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. அதற்கு பதில் தாக்குதலாக ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இவ்வாறாக போர் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், போரின் ஒரு வியூகமாக உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப்போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது. மேலும், 28 இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் சிக்கின.
இதனால் இந்தியாவில் மக்களிடையே எரிபொருள் தட்டுப்பாடு குறித்த பெரும் பதற்றம் ஏற்பட்டது. எனவே, மத்திய அரசு ஈரானுடன் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. அதன் பிறகு ஒவ்வொரு கப்பலாக இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில்,“பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த் ஆகிய இரண்டு எல்பிஜி கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடந்து இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன” என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் சிறப்புச் செயலர் ராஜேஷ் குமார் சின்ஹா தெரிவித்தார்.
இந்தக் கப்பல்கள் மார்ச் 26 முதல் 28 ஆம் தேதிக்குள் இந்திய துறைமுகங்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.