ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியா வரும் மேலும் 2 கப்பல்கள்!
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியா நோக்கி வரும் இரு எல்பிஜி கப்பல்கள் பற்றி...
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து மேலும் இரு இந்தியக் கப்பல்கள் வருவதாக இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த ஒரு மாதமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈரானும் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துகின்றது.
இந்தப் போரின் காரணமாக உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கடல்வ்ழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், உலகளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அதேபோல, இந்தியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களைத் தவிர, மற்ற நாட்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க ஈரான் அனுமதியளித்தது.
இதனைத் தொடர்ந்து, சில இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து வந்தன.
தற்போது பி.டபிள்யூ. டி.ஒய்.ஆர் மற்றும் பி.டபிள்யூ. ஈ.எல்.எம். என்கிற மேலும் இரு எல்பிஜி கப்பல்கள் 94,000 டன்கள் எரிவாயுவுடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியா நோக்கி வந்துகொண்டிருப்பதாக இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதில், ஒரு கப்பல் மும்பை நோக்கியும் மற்றொரு கப்பல் புதிய மங்களூர் நோக்கியும் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியா, ஈரானுடன் வலுவான உறவைக் கொண்டுள்ள அதே நேரத்தில் பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இஸ்ரேலுடன் உறவை விரிவுபடுத்தி வருகின்றது.