ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டதால், சுமார் 20 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியதால், சுமார் 20 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து, பதிலுக்கு ஈரானும் உரிய பதிலடி கொடுத்தது.
மேலும், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது. இதனால், உலகளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.
Advertisement
இதனிடையே, லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்ல வெள்ளிக்கிழமையில் (ஏப். 17) ஈரான் அனுமதியளித்தது.
ஈரானின் இந்த நடவடிக்கை அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்றபோதிலும், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார்.
இந்த நிலையில், அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடரும் வரையில் ஹோர்முஸ் நீரிணையின் வழியாகச் செல்லும் வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து முடக்கப்படும் என்று ஈரான் மீண்டும் அறிவித்துள்ளது.
இதனிடையே, ஐக்கிய அரபு அமீரக கடற்பகுதியிலிருந்து நீரிணையை நோக்கி வந்துகொண்டிருந்த இந்திய கப்பலான பாக்யலட்சுமி (IMO 9351816) என அடையாளம் காணப்பட்ட சரக்குக் கப்பல், வழிமறிக்கப்பட்டு, திருப்பிவிடப்பட்டது.
இதேபோல், இந்திய கச்சா எண்ணெய் கப்பலான தேஷ் சுரக்ஷாவும் ஈரானியப் படைகளால் திருப்பி அனுப்பப்பட்டது. இந்திய கப்பல்கள் உள்பட சுமார் 20 கப்பல்கள் ஓமன் நாட்டை நோக்கிச் செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.