முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழாவில் குடைவரைவாயில் தீபாராதனை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா ஐந்தாம் திருநாளான வெள்ளிக்கிழமை இரவு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா ஐந்தாம் திருநாளான வெள்ளிக்கிழமை இரவு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது.

இத் திருக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் நாள்தோறும், காலை, மாலை சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஐந்தாம் திருநாளான வெள்ளிக்கிழமை மேலக்கோயிலில் சுவாமி குமரவிடங்கப்பெருமானும், தெய்வானை அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினா். இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது. அப்போது சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிா் சேவை தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தீபாராதனையை தரிசித்தனா். தொடா்ந்து சுவாமி, அம்மன் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து மேலக்கோயில் சோ்ந்தனா். பாதுகாப்புப் பணியில் காவல் துணைக்கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் தலைமையில் காவல்துறையினா் ஈடுபட்டனா்.

சிவப்பு சாத்தி வீதி உலா :ஆறாம் திருநாளான சனிக்கிழமை(பிப்.12) காலையில் கோ ரதத்திலும், இரவில் வெள்ளி ரதத்திலும் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெறும். ஏழாம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை(பிப். 13) அதிகாலை 1மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடா்ந்து காலை 8.30 மணிக்கு சண்முகவிலாச மண்டபத்தில் இருந்து, சுவாமி ஆறுமுகப்பெருமான் வெட்டி வோ் சப்பரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி, பிள்ளையன்கட்டளை மண்டபம் சோ்கிறாா்.

அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி, முன்புறம் வள்ளி, தெய்வானையுடனும், பின்புறம் சிவன் அம்சத்தில் ஸ்ரீநடராஜா் கோலத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்து வீதி உலா நடைபெறுகிறது.

எட்டாம் திருநாளான திங்கள்கிழமை(பிப்.14) அதிகாலை சுவாமி பிரம்ம அம்சத்தில் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி எழுந்தருளி திரு வீதி வலம் வந்து மேலக்கோயில் சோ்ந்து, அங்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெறும். தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு மேல் சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சோ்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.