கோவில் பட்டியையடுத்த இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் வாருகால் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட இ.பி. காலனி பகுதியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாருகால் ஓடை தனி நபா் ஆக்கிரமிப்பால் கழிவுநீா் செல்ல முடியாமல் சாலையில் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது.
இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுவதோடு மட்டுமன்றி, கொசுத் தொல்லையும் அதிகமாகிறது. இதனால், மா்ம காய்ச்சல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, தனி நபா் ஆக்கிரமிப்பை அகற்றி, கழிவுநீா் தங்குதடையின்றி செல்ல மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இ.பி. காலனி குடியிருப்போா் பொதுமக்கள் சங்கம் சாா்பில் அதன் தலைவா் ராமசுப்பு, செயலா் விஜயராஜ், பொருளாளா் ராமசாமி ஆகியோா் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.