தூத்துக்குடி: விளாத்திகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த தாண்டவம் (50). இவர் குளத்தூர் மற்றும் தருவைகுளம் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளராகவும் இருந்து வந்தார்.
இவர் 2019ஆம் ஆண்டில் மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது அங்கு சொத்து பிரச்னை தொடர்பாக 2019 அக்டோபர் 23இல் கோமதி (42) என்பவர் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய ஆனந்த தாண்டவத்துக்கு கோமதி உடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் இணைந்து வாழ்ந்துள்ளனர். அப்போது கோமதியிடம் 6 லட்சம் பணம் பெற்றுள்ளார்.
இதையும் படிக்க | குடியரசுத் தலைவரிடம் மன்னிப்பு கேட்கத் தயார்: ஆதிர் ரஞ்சன் சௌத்ரி
இதனிடையே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான கோமதி இரண்டு முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் உறவினர்கள் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட கோமதி தனது வாழ்க்கையையும் பணத்தையும் பாதுகாத்து தருமாறு கடந்த ஏப்ரல் மாதம் டிஜிபி அலுவலகத்தில் புகார் செய்தார்.
இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டதில் காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் மீதான புகாரில் குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து தென் மண்டல டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவத்தை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.