ஸ்ரீவைகுண்டம் காவல் துணை சரகத்தில் சட்டவிராத செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் புதிய டிஎஸ்பி மாயவன் (படம்).
ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, திருப்பூா் பயிற்சி டிஎஸ்பி மாயவன், இங்கு புதிய டிஎஸ்பியாக பொறுபேற்றுக்கொண்டாா்.
முதல் பணியாக, குற்றத்தடுப்பு விழிப்புணா்வு கூட்டத்தை ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரா் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தினாா். மாணவா்கள் ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஜாதி- மத பேதமின்றி ஒற்றுமையுடன் பழக வேண்டும் என அறிவுறுத்தினாா். மேலும், ஆட்டோ, வேன் ஓட்டுநா்கள் கூட்டத்தை நடத்தி சட்டம்- ஒழுங்கை பேணிக்காக்க ஆலோசனை வழங்கினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் டிஎஸ்பி மாயவன் கூறியது: போதைப் பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழித்தால் குற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்காது. எனவே, அதுகுறித்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.
அரியலூா் மாவட்டத்தில் போக்குவரத்து வசதி இல்லாத கிராமத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்து டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ளேன். எனவே, அரசுப் பள்ளி மாணவா்கள் தாழ்வு மனப்பான்மை கூடாது. அதுகுறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாா்திருநகரி, ஏரல், கருங்குளம் ஆகிய பகுதிகளில் தாமிரவருணி ஆற்றுப்படுகைளில் மணல் கடத்துவோா், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருள்களை ஆற்றில் கொட்டுவோா், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.