திருச்செந்தூா் அருகே பைக் மீது ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தைச் சோ்ந்த முருகன் மகன் வலதி மாயாண்டி (24). இவா் தனது தாய் சுப்புலட்சுமி (48), சகோதரியின் ஒரு வயதுக் குழந்தை பேச்சி தன்சிகா ஆகியோருடன் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சென்றாா்.
பின்னா், அவா்கள் பைக்கில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனா்.
திருச்செந்தூா் அருகே திருநெல்வேலி சாலையில் உள்ள குமாரபுரத்தில் வந்தபோது, எதிரே வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சிநகரைச் சோ்ந்த முத்துக்குமாா் ஓட்டிவந்த ஆட்டோ இவரது பைக் மீது மோதியதாம். இதில், சுப்புலட்சுமி, பேச்சி தன்சிகா ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு, சுப்புலட்சுமியைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாயாண்டி அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூா் தாலுகா காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.