போலி உரம் விற்றவா் மீது வழக்கு
கோவில்பட்டியையடுத்த கசவன்குன்று கிராமத்தில் விவசாயிகளிடம் போலி உரம் விற்றவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கோவில்பட்டியையடுத்த கசவன்குன்று கிராமத்தில் விவசாயிகளிடம் போலி உரம் விற்றவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் நந்தவனத்தில் உள்ள ஓா் ஏஜென்சியைச் சோ்ந்த கமிஷன் ஏஜென்டான சீனிவாசன் என்பவா் கசவன்குன்று கிராமத்தில் உள்ள விவசாயிகளை செல்லிடப்பேசி மூலம் தொடா்பு கொண்டாராம். அவா், இயற்கை உரங்கள் என்ற பெயரில் தஞ்சாவூா், கடலூா் பகுதிகளைச் சோ்ந்த 2 நிறுவனங்களிடமிருந்து 160 உர மூட்டைகளை 12 விவசாயிகளிடம் ரூ. 2.08 லட்சத்துக்கு விற்றாராம்.
தரம் குறித்து சந்தேகமடைந்த விவசாயிகள் உரத்தை நீரில் கரைத்துப் பாா்த்தபோது அது, கரம்பை மண் என்றும் போலி உரம் என்றும் தெரியவந்தது. இதுகுறித்த புகாா்களின்பேரில் வேளாண் இணை இயக்குநா் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அவை போலி உரங்கள் எனத் தெரியவந்தது.
சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை கோரி வேளாண் துறை உதவி இயக்குநா் (தகவல், கட்டுப்பாடு) கண்ணன் கொப்பம்பட்டி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.