4 நாள்களுக்கு பின்பு கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்
பலத்த சூறைக் காற்று காரணமாக கடந்த 4 நாள்களாக கடலுக்குச் செல்லாமல் இருந்த தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் வியாழக்கிழமை காலையில் கடலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
தூத்துக்குடி: பலத்த சூறைக் காற்று காரணமாக கடந்த 4 நாள்களாக கடலுக்குச் செல்லாமல் இருந்த தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் வியாழக்கிழமை காலையில் கடலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
தமிழக கடற்கரைப் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
மேலும், தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பிலும், மாவட்டம் முழுவதும் உள்ள நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டது.
தற்போது, கடலுக்குச் செல்ல மாவட்ட மீன்வளத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, கடந்த 4 நாள்களுக்கு பின்பு வியாழக்கிழமை காலையில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளன. இதேபோன்று திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்தும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.