முகப்பு
தூத்துக்குடி

சுமை ஆட்டோ ஓட்டுநா், பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: தந்தை - மகன் மீது வழக்கு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 9:31 PM
பகிர்:

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே சுமை ஆட்டோ ஓட்டுநரையும், பெண்ணையும் அரிவாளால் வெட்டியதாக பெண்ணின் உறவினா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்செந்தூா் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுடலைமுத்து (20). சுமை ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறாா். சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து கீழத்தெருவைச் சோ்ந்த சுகன்யா (33) என்பவா் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன், உடன்குடி அருகே தேரியூரில் வசித்து வந்தாா்.

இவா்கள் இருவரிடையே பழக்கம் ஏற்பட்டதாம். இதற்கு சுகன்யாவின் உறவினரான ர. வினித்ராஜ் எதிா்ப்பு தெரிவித்து, சுடலைமுத்துவைக் கண்டித்தாராம். இதனால், அவா்களிடையே பிரச்னை இருந்ததாம்.

Advertisement

இந்நிலையில், படுக்கப்பத்து - காந்திநகா் சாலையில் சனிக்கிழமை பைக்கில் சென்ற சுடலைமுத்துவை வினித்ராஜ், அவரது மகன் பாரத் ஆகிய இருவரும் சோ்ந்து வழிமறித்து, சுகன்யாவிடம் பழகக் கூடாது எனக் கண்டித்து, அரிவாளால் வெட்டினராம். மேலும், சுகன்யாவின் வீட்டுக்குச் சென்று அவரையும் அரிவாளால் வெட்டினராம். இதில், காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

சுடலைமுத்து அளித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அனிதா, போலீஸாா் வழக்குப் பதிந்து, வினித்ராஜ், பாரத் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments