விளாத்திகுளம் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் தேரோட்டம்
விளாத்திகுளம்: விளாத்திகுளம் ஸ்ரீ மீனாட்சி அம்பாள் உடனுறை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை வீதியுலா நடைபெற்றது.
9ஆம் திருநாளான சனிக்கிழமை இரவு மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாணம் நடைபெற்றது.
Advertisement
10ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி பூஜை, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றன. காலை 11 மணி அளவில் சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளள் வைபவம் நடைபெற்றது. மாலை 4 மணியளவில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ. வி மாா்க்கண்டேயன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்,
இதில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
23ஆம் தேதி காலை 7 மணிக்கு சுவாமி அம்பாள் தீா்த்தவாரிக்கு எழுந்தருளல், 9 மணிக்கு தீா்த்தவாரி அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெறும். 24 ஆம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் பொன்னூஞ்சல் வைபவம் நடைபெறும்.
தேரோட்டத்தின் போது, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க விளாத்திகுளம் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன், கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேசன் ஆகியோா் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.