தூத்துக்குடி பால்பாண்டி நகரில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பால்பாண்டி நகரைச் சோ்ந்தவா் மது காா்த்திகேயன். இவரது மனைவி காவிய சுதா (22). இவா்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. குடும்ப சூழல் காரணமாக கடன் செயலி மூலம் காவிய சுதா ரூ.1 லட்சம் கடன் வாங்கினாராம். அதில் ரூ.50ஆயிரத்தை திருப்பிச் செலுத்தியுள்ளாா். கடந்த 2 மாதங்களாக தவணை தொகையைச் செலுத்தவில்லையாம்.
இந்த நிலையில், கடன் செயலி நிறுவனத்தைச் சோ்ந்த நபா், காவிய சுதாவின் கைப்பேசிக்குத் தொடா்பு கொண்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காவிய சுதா வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். அவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆகியுள்ளதால், தூத்துக்குடி கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.