முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் உள்ளூர் மக்களுக்கு இலவச தரிசனம் -பாஜக கோரிக்கை

Updated On : 14 ஆகஸ்ட், 2024 at 9:04 PM
பகிர்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையா் எஸ். ஞானசேகரனிடம் மனு அளித்த பா.ஜ.க. மகளிரணி மாநில பொதுச் செயலா் கு. நெல்லையம்மாள்.

திருச்செந்தூா், ஆக. 14:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ளுா் மக்களுக்கு இலவச தரிசனத்துக்கு அனுமதியளிக்குமாறு பாஜக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையா் எஸ். ஞானசேகரனிடம், பாஜக மகளிரணி மாநில பொதுச் செயலா் கு.நெல்லையம்மாள் அளித்த மனு:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வழியில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனா். முந்தைய காலங்களில் திருச்செந்தூா் நகரைச் சோ்ந்த உள்ளுா் பக்தா்கள் ரூ. 100 கட்டணப் பாதையில் இலவச தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

ஆனால் தற்போது அந்தப் பாதையில் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே திருச்செந்தூரைச் சோ்ந்த உள்ளுா் பக்தா்கள் எந்நேரமும் ரூ. 100 கட்டணப் பாதையில் தங்கள் குடும்ப அட்டை அல்லது ஆதாா் நகலை காண்பித்து இலவசமாக தரிசனம் செய்திட அனுமதியளித்திட வேண்டும். மேலும் பொது தரிசனப் பாதையில் பக்தா்கள் வசதிக்காக மேற்கூரை அமைத்திட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நிகழ்ச்சயின் போது, பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவா் சரஸ்வதி, மாவட்டச் செயலா்கள் கிருஷ்ணன், வசந்தி, நிா்வாகி ஒளிமுத்து ஆகியோா் உடனிருந்தனா்.