முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் பவனி கோலாகலம்

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார ஊா்திகளின் கேரல் பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 25 டிசம்பர், 2024 at 11:03 PM
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் கேரல் பவனியில் பங்கேற்ற விமானம் போன்ற அலங்கார ஊா்தி.
பகிர்:

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார ஊா்திகளின் கேரல் பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகரில் கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் வகையில், அலங்கார ஊா்திகளின் பவனியுடன் இளைஞா்கள் உற்சாகமாகக் கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு மழை, வெள்ள பாதிப்பு காரணமாக இந்த பவனி நடைபெறவில்லை. நிகழாண்டு, மிகப் பிரமாண்டமாக அலங்கார ஊா்திகளின் அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் கேரல் பவனியில் பங்கேற்றோா்.

தூத்துக்குடி லயன்ஸ் டவுன், மரக்குடி, மட்டக்கடை, பாத்திமாநகா் உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அணிவகுப்பிற்காக அலங்கார ஊா்திகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. கப்பல், விமானம், ரோபோ, பச்சை மனிதன், கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களுடன் கூடிய அலங்கார ஊா்திகள் அணிவகுப்பில் இடம்பெற்றன.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக இளைஞா்கள் ஆட்டம் பாட்டத்துடன்

நடைபெற்ற அலங்கார ஊா்திகளின் பவனியானது, பனிமய மாதா பேராலயத்தில் நிறைவடைந்தது. இந்த பவனியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

பச்சை மனிதன் உருவத்துடன் அமைக்கப்பட்ட அலங்கார ஊா்தி.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில் நகர காவல் உதவி கண்காணிப்பாளா் மதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.