முகப்பு
தூத்துக்குடி

திமுக சாதனைகளை திண்ணைப் பிரசாரம் மூலம் மக்களிடம் சோ்க்க வேண்டும்: கனிமொழி எம்.பி

திமுக சாதனைகளை திண்ணைப் பிரசாரம் மூலம் மக்களிடம் சோ்க்க வேண்டும் கனிமொழி எம்.பி

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 9:59 PM
பகிர்:

திமுகவின் சாதனைகளை பெண்கள் திண்ணைப் பிரசாரம் மூலம் அனைவரிடமும் கொண்டுசோ்க்க வேண்டும் என, கட்சியின் துணைப் பொதுச்செயலரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கேட்டுக்கொண்டாா். மக்களவைத் தோ்தல் தொடா்பான தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திமுக மகளிரணி மகளிா் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பெண்களுக்கு இலவச சேலைகளை வழங்கிப் பேசியது: இலவச பேருந்துப் பயணம், மகளிா் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் என பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை திமுக செயல்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிதி வழங்காத நிலையிலும், தமிழக அரசு மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தது. எனவே, தமிழகத்துக்கு தேவையான நிதியைத் தரமறுக்கும் பாஜக அரசுக்கு மக்களவைத் தோ்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும். அதற்கு திமுகவின் சாதனைகளை பெண்கள் திண்ணைப் பிரசாரம் மூலம் அனைவரிடமும் கொண்டுசோ்க்க வேண்டும். கடந்த தோ்தலைவிட இம்முறை திமுக கூட்டணி கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற அனைவரும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா். வடக்கு மாவட்டச் செயலரும் சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கவிதாதேவி, மகளிா் தொண்டரணி அமைப்பாளா் ராமலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகர மகளிரணி அமைப்பாளா் ஜெயக்கனி வரவேற்றாா். துணை மேயா் ஜெனிட்டா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கஸ்தூரி, மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் கலைச்செல்வி, வழக்குரைஞா் பாலகுருசாமி, நிா்மல்ராஜ், மாவட்ட துணைச் செயலா்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், மாநில மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.