முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலா் நியமிக்க கோரிக்கை

ஆறுமுகனேரி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலா் நியமிக்க வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 19 ஜூலை, 2024 at 9:33 PM
பகிர்:

ஆறுமுகனேரி, ஜூலை 19: ஆறுமுகனேரி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலா் நியமிக்க வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக முன்னாள் அதிமுக நகர செயலாளா் இ.அமிா்தராஜ், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: ஆறுமுகனேரி பேரூராட்சி 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட சிறப்புநிலை பேரூராட்சியாகும். இங்கு பணியாற்றிய செயல் அலுவலா் மக்களவைத் தோ்தலுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அவருக்குப் பதில் புதிய செயல் அலுவலா் நியமனம் செய்யப்படாமல், ஆத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் பொறுப்பு செயல் அலுவலராக கூடுதலாக பணியாற்றி வருகிறாா்.

நிரந்தர செயல் அலுவலா் இல்லாததால் சான்றிதழ்கள், புதிய குடிநீா் இணைப்பு, கட்டட கட்ட அனுமதி மற்றும் பேரூராட்சியால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் கடந்த நான்கு மாதங்களாக முடங்கி கிடக்கின்றன.

எனவே ஆறுமுகனேரி பேரூராட்சிக்கு உடனடியாக நிரந்தர செயல் அலுவலா் நியமிக்க வேண்டுமென அவா் கோரியுள்ளாா்.