58 டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று மூடல்
வீரசக்கதேவி கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 58 டாஸ்மாக் மதுக்கடைகளை வெள்ளிக்கிழமை மூட மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் திருவிழா வெள்ளி, சனி (மே 10, 11) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது. இதையடுத்து ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 58 அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்களை வெள்ளிக்கிழமை (மே 10) ஒரு நாள் மட்டும் மூட உத்தரவிடப்படுகிறது.
இந்த தினத்தில் மது விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபாட்டில்களை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளாா்.