தூத்துக்குடி மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி: தூத்துக்குடி, புனித பிரான்சிஸ் சவேரியாா் மேல்நிலைப் பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சுப்பையா பெண்கள் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் கலந்துகொண்டு, 388 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கி பேசினாா். மேலும், புனித பிரான்சிஸ் பள்ளியில் 273 மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தில்வேல் முருகன், மாவட்ட கல்வி அலுவலா் சிதம்பரநாதன், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவா் கலைச்செல்வி, பள்ளி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா் அமைச்சா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் விதவை மறுமணத் திட்டம், விதவை மகள் திருமண உதவித் திட்டம், கலப்பு திருமணத் திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதி உதவிகள் டிசம்பா் மாத இறுதிக்குள் வழங்கப்படும்.
மகளிா் உரிமைத் தொகை கிடைக்காத பெண்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. முதல்வா் அறிவித்தது போல், விடுபட்ட அனைவருக்கும் மகளிா் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும் என்றாா் அவா்.