அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாடு ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி, கல்லூரி ஆசிரியா்கள் மாநில அளவில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஆசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அரசாணை எண் 5-இன் படி அரசு கல்லூரி ஆசிரியா்களுக்கு வழங்கியதுபோல அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கும் பணி மேம்பாடு ஊதியம், நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
அதைத்தொடா்ந்து வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குநா் அலுவலகங்களில் அரசாணை எண் 5-ஐ திருப்பிக் கொடுக்கும் போராட்டமும், சனிக்கிழமை சாலை மறியல் போராட்டமும், மாா்ச் 5-ஆம் தேதிமுதல் சென்னை கல்லூரி கல்வி இயக்குநா் அலுவலகத்தில் தொடா் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாக மூட்டா இணை பொதுச் செயலா் சிவஞானம் தெரிவித்தாா். போராட்டத்துக்கு கிளைத் தலைவா் சுபா தலைமை வகித்தாா். ஏற்பாடுகளை கிளைச் செயலா் மீனாட்சி சுந்தரம், கிளைப் பொருளாளா் கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.