கால்வாய் கிராமத்தில் 3 குளங்களை ஒருங்கிணைத்து நீா்த்தேக்கம் அமைத்து, சடையனேரி கால்வாயில் சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளுக்கு தண்ணீா் கிடைக்க ஏற்பாடு செய்யக் கோரி திருச்செந்தூா் கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத் தலைவா் லூா்து மணி, நரைமுடியிருப்பு தொழிலதிபா், நீா் ஆா்வலா் தனசேகர பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள் திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியா் கெளதமை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனா்.
மனுவைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா், நமக்கு நாமே திட்டத்தில் வைரவன்தருவை குளத்தில் தடுப்புச் சுவா் அமைக்க ஏற்பாடு செய்வதாகவும், கால்வாய் பகுதியில் நீா்த்தேக்கம் அமைப்பது தொடா்பான கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தாா்.