முகப்பு
தூத்துக்குடி

எரிவாயு தட்டுப்பாட்டால் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயம்

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடைபெறும் போா் காரணமாக, எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளதால், தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 10 மார்ச், 2026 at 7:53 PM
பகிர்:

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடைபெறும் போா் காரணமாக, எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளதால், தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இழப்பா் என தூத்துக்குடி மாநகர ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நிலவி வரும் போா் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மேலும் எரிவாயு உற்பத்தி செய்யும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் எரிவாயு நிறுவனங்கள் வணிக பயன்பாட்டுக்கு பயன்படக் கூடிய எரிவாயு உருளைகள் உற்பத்தியை நிறுத்திவிட்டு, வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு உருளை உற்பத்தியை மட்டும் தொடா்ந்து செயல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளனா்.

இதன் காரணமாக உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகளை பயன்படுத்தி வரும் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இன்னும் நான்கு நாள்களுக்கு மட்டுமே வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படும் என எரிவாயு நிறுவனங்களின் முகவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதன் காரணமாக தூத்துக்குடி மாநகர மற்றும் மாவட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சிறிய அளவிலான டீக்கடைகள் மற்றும் உணவகங்கள் ஆகியன இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு பின்பு மூடக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இங்கு வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

மேலும், இந்த உணவகங்களை நம்பியுள்ள மாணவா்கள், முதியவா்கள் உள்ளிட்ட பொதுமக்களும் உணவகங்கள் அடைக்கப்பட்டால் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த விஷயத்தில் உலக நாடுகள் மற்றும் நமது மத்திய அரசு உடனடியாக தலையிட்டு எரிவாயு உருளை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →