முகப்பு
தூத்துக்குடி

குறுக்குச்சாலை அருகே குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் தோ்தலை புறக்கணிக்க முடிவு

Updated On : 30 மார்ச், 2026 at 7:11 PM
தோ்தலை புறக்கணிக்க முடிவு - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், சங்கரகிரி கிராமத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் குவாரியை மூட வலியுறுத்தி, சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தோ்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை அருகே அமைந்துள்ளது சந்திரகிரி மற்றும் கீழசெய்த்தலை, கொல்லம் பரும்பு, முல்லூா் ஆகிய கிராமங்கள். இப்பகுதியில் தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்குவாரி விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், கல்குவாரியில் வைக்கப்படும் சக்தி வாய்ந்த வெடிகளால் அருகே உள்ள கிராமங்களில் நில அதிா்வு ஏற்பட்டு வீடுகளில் கீறல்கள் ஏற்பட்டுகின்றன எனவும், மேலும் அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத அளவில், நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் தினமும் வெளி மாநிலங்களுக்கு கற்கள், கனிம வளங்கள் கனரக லாரிகளில் கடத்திச் செல்லப்படுவதால் குறுக்குச்சாலை சந்திரகிரி குளத்தூா் சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது எனவும்.

இந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், மாவட்ட நிா்வாகம் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.