கமல்ஹாசனின் முடிவு காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம்: திருமாவளவன் பாராட்டு
கமல்ஹாசனின் தொலைநோக்கு பார்வை அரசியல் புரிதலின் வெளிப்பாடு காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம் என திருமாவளவன் பாராடு குறித்து...
கமல்ஹாசனின் தொலைநோக்கு பார்வை அரசியல் புரிதலின் வெளிப்பாடு காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம் என திருமாவளவன் பாராட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய் இரவு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார்.
"இது தியாகம் அல்ல, கடமை" என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
Advertisement
இதையடுத்து பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்! என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கமல்ஹாசனின் முடிவு காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம் என திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
" நெருக்கடியான சூழலில் 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. " ...
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும் தலைவருமான கமல்ஹாசனின் இந்த அதீத உணர்வு, மிகவும் ஆழமான, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல் புரிதலின் வெளிப்பாடாகும்.
நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாமல் நனிநாகரிகத்தோடு தனது கையறுநிலையை தெளிவுபடுத்தியுள்ள பாங்கு, அவரது அறிவுமுதிர்ச்சியையும் அதியுச்சப் பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது.
திமுக தலைமையிலான 'மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ' வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு, துணிச்சலாக அவர் மேற்கொண்டுள்ள இந்த முடிவு அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைபெறக்கூடிய ஒன்றாகும்.
அரசியல் ஆதாயத்திற்காகவோ தான்தோன்றித் தனமாகவோ உணர்ச்சிவயப்பட்டுத் தாறுமாறாக வெடித்துச் சிதறாமல், 'நாங்கள்
போட்டியிட விரும்பவில்லை' என்றும்; திமுக.தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தீவிரமாகப் பணியாற்றுவோம்" என்றும்; கமல்ஹாசன் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம் ஆகும்.
அவர்மீது மக்களிடையே நிலவும் அதியுயர் நன்மதிப்பு பன்மடங்கு பல்கிப் பெருகும்!
மாண்புநிறை கமல்ஹாசனுக்கு மனம்நிறைந்த பாராட்டுகள்! என அவர் கூறியுள்ளார்.