முகப்பு
திருச்சி

வேதாரண்யம் பெயர் மாற்றம் திரும"றை'க்காடு என்பதில் இருவேறு கருத்துகளால் குழப்பம்

வேதாரண்யம், ஜூன் 17: வேதாரண்யம் என்று அழைக்கப்படும் ஊர்ப் பெயரை திருமறைக்காடு என மாற்றம் செய்வது தொடர்பாக வியாழக்கிழமை அரசு கருத்துரு பெற உள்ளது. இந்நிலையில், வேதாரண்யம் என்ற பெயரை திரும"றை'க்காடு என

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:23 PM
பகிர்:

வேதாரண்யம், ஜூன் 17: வேதாரண்யம் என்று அழைக்கப்படும் ஊர்ப் பெயரை திருமறைக்காடு என மாற்றம் செய்வது தொடர்பாக வியாழக்கிழமை அரசு கருத்துரு பெற உள்ளது.

இந்நிலையில், வேதாரண்யம் என்ற பெயரை திரும"றை'க்காடு என அழைப்பதில் இரு வேறு கருத்துகள் எழுந்துள்ளதால், தமிழ் ஆர்வலர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பல்வேறு நிலைகளில் சிறப்புப் பெற்ற பகுதியாகும். இது திருமறைக்காடு என தமிழில் அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் வேத ஆரணியம் என மாற்றம் பெற்று, தொடர்ந்து வேதாரண்(ணி)யம் என்று மறுவியது.

வேதம்- மறை, ஆரண்யம்-காடு எனப் பொருள். இங்குள்ள கோயிலில் இறைவன் மறைக்காட்டு உறையும் மணாளன் என அழைக்கப்பட்டுள்ளார். அதுவே, வடமொழியில் வேதாரண்யேஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டது.

நான்மறைகளும் இறைவனை வணங்கி வழிபட்டதாகவும், பின்னர், அவை மரம், செடி, கொடிகளாக இன்றும் நின்று வருவதால், மறைக்காடு எனப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் தங்கியிருந்த இடமே இங்குள்ள நாலுவேதபதி என்றும், அவை பூக்கள் பறித்த பகுதியே புஷ்பவனம் எனவும் இங்குள்ள கிராமங்களுக்கான பெயர்க் காரணம் கூறப்படுகிறது.

கோயிலில் சோழ மன்னர்கள் காலம் தொடங்கி, விஜய நகர மன்னர்கள் துளஜாஜி மகராஜா காலத்து கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இவற்றில் திருமறைக்காடு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் ஏழு திருமுறைகளிலும் உள்ள தேவாரப் பதிகங்களில் திருமறைக்காடு எனக் குறிப்பிடப்படுகிறது. வேதங்கள் கோயிலின் கதவுகளை மூடிச் சென்றதாகவும், அவற்றைத் திறக்க, பின் அடைக்க தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரது பாடல்களிலும், சுந்தர் பாடிய பத்துப் பதிகங்களிலும் இவ்வூரின் பெயர் வேதவனம், மறைவனம், மறைக்காடு எனக் குறிப்பிடப்பட்ட சான்றுகள் உள்ளன.

மரைக்காடு: மரை என்றால் மான் எனப் பொருள். இங்கு இன்றும் அரிய மான் இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இதன் காரணமாகவே மான்கள் வளரும் காடு எனப் பொருள்பட அமைந்த திருமரைக்காடு, பிற்காலத்தில் திருமறைக்காடு என மாறி உள்ளது எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர்.

சமயத்தைப் பரப்பும் நோக்கம் கொண்டே மரை என்பது மறை (வேதம்) என மாற்றி அமைக்கப்பட்டதாக ஒரு தரப்பினரும், மறை என்பதற்கு வேதம் என்பது மட்டும் பொருள் அல்ல, மறை என்றால் சிறந்த இலக்கியத்தைக் குறிக்கும் என்றும், அதற்கு உதாரணமாகத் திருக்குறளை உலகப் பொதுமறை என அழைப்பதை மற்றொரு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெயர் மாற்றம்: வேதாரண்யத்தை திருமறைக்காடு என்று தமிழில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கடந்த பல ஆண்டுகளாக இங்குள்ள தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைத்தன.

இந்நிலையில், திருமறைக்காடு எனப் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாகக் கருத்தறிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ் ஆர்வலர்களின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றம் செய்ய அரசு கருத்துரு பெறும் நிலையில், திருமறைக்காடா அல்லது திருமரைக்காடா என்பதில் தமிழ் ஆர்வலர்களிடையே ஏற்பட்டுள்ள இருவேறுபட்ட கருத்துகள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 18) மாலை 4 மணிக்கு ஆர்வலர்களிடம் அரசு கருத்துரு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →