ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல்: ஐ.நா.வில் பாகிஸ்தான் மீது இந்தியா சாடல்
ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் சபையில் பாகிஸ்தானை இந்தியா சாடியது.
ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் சபையில் பாகிஸ்தானை இந்தியா சாடியது.
இஸ்லாமிய வெறுப்பை எதிா்த்து போராடுவதற்கான சா்வதேச நாளையொட்டி, ஐ.நா. பொதுச் சபையில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் திங்கள்கிழமை பேசியதாவது:
இந்தியாவுக்கு மேற்கே உள்ள நாடு (பாகிஸ்தான்), அதன் அருகில் உள்ள நாடுகளை இஸ்லாமிய வெறுப்பு கொண்டதாக கற்பனைக் கதைகளை ஜோடிப்பதில் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
அந்நாட்டில் (பாகிஸ்தான்) அகமதியா்கள் மீது கட்டவழித்துவிடப்படும் கொடூரமான அடக்குமுறை, அந்நாட்டிலிருந்து நிா்கதியான ஆப்கன்களை பெருமளவில் வெளியேற்றுதல், புனித ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் வான்வழி குண்டுவீச்சுத் தாக்குதல் (ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தானின் தாக்குதல்) ஆகியவற்றை என்ன பெயரிட்டு அழைப்பது என்று தெரியவில்லை.
57 உறுப்பு நாடுகளை கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை இந்தியாவுக்கு எதிரான ஆயுதமாக்க பாகிஸ்தான் திட்டமிட்டு முயற்சித்து வருகிறது. அந்த அமைப்பு இந்தியாவுக்கு எதிராக தவறான, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து முன்வைத்து வருகிறது. மத அடையாளத்தை ஆயுதமாக்கும் போக்கும், ஆபத்துகளும் அதிகரித்து வருவதை ஐ.நா. கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் உள்ளனா். ஜம்மு-காஷ்மீா் உள்பட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்காகப் பேசும் பிரதிநிதிகளை சுயமாகத் தோ்வு செய்கின்றனா்.
மதத்தை அரசியல்மயமாக்குவது குறைகளைக் களையாது என்பதற்கான சாட்சியம் வரலாற்றில் உள்ளது. மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுவது, வெறுப்புணா்வை வெளிப்படுத்துவது ஆகியவற்றுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது என்றாா்.