ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
தஞ்சாவூர், ஆக. 12: தஞ்சாவூரில் விதிகளை மீறி அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. தஞ்சாவூர் நகரில் புதி
தஞ்சாவூர், ஆக. 12: தஞ்சாவூரில் விதிகளை மீறி அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தஞ்சாவூர் நகரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வல்லம், நாஞ்சிக்கோட்டை, கரந்தை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகள் வரை சுமார் 40-க்கும் அதிகமான ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
இந்த வகை ஆட்டோக்களில் குறைந்தபட்சம் 8 பயணிகள் வரை ஏற்றிச் செல்லாம். ஆனால், நகரில் இயக்கப்படும் பெரும்பாலான ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.
Advertisement
ஆட்டோவில் நடத்துநராகப் பணியாற்றுபவர் ஆட்டோவுக்குள் அமர்ந்து பயணிகளிடம் பயணச் சீட்டை கொடுப்பதில்லை. மாறாக, ஆட்டோ கதவுகளைத் திறந்துவிட்டு, அதில் அமர்ந்து கொண்டு செல்கின்றனர். இதனால், சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக இருப்பதுடன், வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன.
தவிர, சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருக்கும் போது, சாலையோரத்தில் நிற்கும் பயணிகள் நிறுத்துமாறு சைகை செய்தால், சூழ்நிலையைப் பற்றிக் கவலை கொள்ளாமல் உடனடியாக நிறுத்தும் போக்கால், ஆட்டோவை பின்தொடர்ந்து வரும் வாகனங்கள் ஆட்டோவிலோ அல்லது வேறு வாகனத்திலோ மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
மேலும், சாலையில் இயக்கத் தகுதியில்லாத சில ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. கரும்புகையைக் கக்கிக் கொண்டு செல்லும் ஆட்டோக்களை பின்தொடர்ந்து செல்வோர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்டுகின்றனர். ஆனால், பொதுமக்களின் வேதனையைப் பற்றி அவர்கள் கவலை கொள்வதில்லை.
எனவே, வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் ஷேர் ஆட்டோக்களின் தகுதியைப் பரிசோதித்து, இயக்கத் தகுதியில்லாதவற்றைத் தடை செய்ய வேண்டும். இந்த ஷேர் ஆட்டோக்களை இயக்குவதற்கென காவல் துறையினர் ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, அனைத்து ஷேர் ஆட்டோ ஓட்டுநர், நடத்துநர்களை அழைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதன்மூலம், விபத்துகள் தவிர்க்கப்படுவதுடன், பயணிகளும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். அதேவேளையில், அதிக எண்ணிக்கையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களையும் ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியம்.