முகப்பு
திருச்சி

2011 ஆம் ஆண்டை தமிழ்ச் செம்மொழி ஆண்டாக அறிவிக்க வேண்டும் : வீரமணி

கரூர், ஜூலை 6: 2011ம் ஆண்டை தமிழ் செம்மொழி ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.   திராவிடர் கழக மண்டல மாநாடு கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்குத் தலைமை வக

Updated On : 20 செப்டம்பர் 2012, 4:47 pm IST
பகிர்:

கரூர், ஜூலை 6: 2011ம் ஆண்டை தமிழ் செம்மொழி ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

  திராவிடர் கழக மண்டல மாநாடு கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்குத் தலைமை வகித்த திக மாநிலத் தலைவர் கி. வீரமணி பேசியது:

  திகவும், திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள். திராவிடர் கழகம் சமத்துவம் பேசும் இயக்கம் என்கிறார்கள். சமத்துவத்திற்கு எதிராக இருக்கும் மதம் இந்து மதம். இதில் ஜாதிப் பிரிவுகள் இல்லாமல் இருக்கிறதா? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவு மூலம் இந்துக்களை முதல்வர் கருணாநிதி ஒன்றிணைத்துள்ளார். இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று இந்து முன்னணி கூறுகிறது. முதலில் ஜாதி வேறுபாடுகளைக் களைய முன் வாருங்கள்.

Advertisement

  திகவைப் பார்த்து சில கேள்விகளை முன்வைக்கிறார்கள். சங்கரமடத்தில் தலித் ஒருவர் குருவாக வரும்போது, தகுதியின் அடிப்படையில் திகவிற்கும் தலைவராக தலித் வருவார். திக என்பது ஒரு ஜாதி, சமயமற்ற அமைப்பு. எனவே, இங்கு ஜாதி பார்ப்பதில்லை.

  மசூதிகளில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமென இந்து முன்னணியே போராட்டம் நடத்தலாமே? இதுபோல, கிறிஸ்தவம், இஸ்லாமிலுள்ள மூடநம்பிக்கைகளை எதிர்க்கத் தயாரா என்று கேட்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எந்தக் கடவுளின் மீதும் நம்பிக்கையில்லை. கடவுள் இல்லை என்பதே எங்கள் கொள்கை. எனவே, மூடநம்பிக்கை எங்கிருந்தாலும் எதிர்ப்போம்.

  இதற்கு எங்களிடம் ஒரே அளவுகோல்தான் உள்ளது. பெரியாருக்குச் சிலை வைத்திருப்பது வழிபாடு நடத்துவதற்காக அல்ல. அவரைப் பின்பற்றுவதற்காக, வழிபாடு என்பது வேறு, பின்பற்றுவது என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

  நாட்டின் சுதந்திரத்திற்கும், சகோதரத்துவத்திற்கும் எதிராகச் செயல்படும் அமைப்புகள் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். போன்றவை. தமிழர்கள் இதிலிருந்து விலகியிருக்க வேண்டும். பெரும்பான்மை சமுதாயத்திற்கு கிடைக்கும் எல்லா உரிமைகளும் சிறுபான்மை சமுதாயத்திற்கும் கிடைக்க வேண்டும்.

  உலகத்தில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட 5 மொழிகளில் சீனமும், தமிழுமே மக்களால் பேசப்பட்டு வருகின்றன. கருணாநிதியின் சாதனைகளில் உச்சகட்ட சாதனை தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததுதான். தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்புதான், சமஸ்கிருதத்திற்கே அந்தப் பெருமை கிடைத்தது. ஆனால், ஒரு சதத்தினர்கூட பேசாத செத்த மொழியான சமஸ்கிருதத்தை கெüரவிக்கும் விதமாக சமஸ்கிருத ஆண்டை பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்

முரளிமனோகர்ஜோஷி அறிவித்தார்.

  அனைத்துத் தகுதிகளும் பெற்ற தமிழைக் கெüரவிக்கும் விதமாக வரும் 2011ம் ஆண்டை தமிழ்ச் செம்மொழி ஆண்டாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதை முதல்வர் கருணாநிதி முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒருவனுக்கு மொழி மூலமாகவே தன்மானம் கிடைக்கும்.

  தமிழகத்திற்கு வளம் சேர்க்கும் சேதுத் திட்டம் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதற்கும் மதச் சாயம் பூசப்பட்டு ஒரு சிலர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். எதிர்ப்பவர்களுக்கு நாங்கள் எதிரிகளல்ல. திருந்து அல்லது திருத்து என்ற அடிப்படையில் திராவிடர் கழகம் இயங்கி வருகிறது என்றார் வீரமணி.

  கூட்டத்தில், திமுக மாவட்டப் பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், மக்களவை முன்னாள் உறுப்பினர் கே.சி. பழனிசாமி, கொள்கைப் பரப்பு இணைச் செயலர் பரமத்திசண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  கரூர் மாவட்ட திக தலைவர் மு.க. ராசசேகரன் வரவேற்றார். மாவட்டச் செயலர் மா. காளிமுத்து நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.