அடிக்கடி பழுதாகும் கரூர்- திருச்சி பயணிகள் ரயில்
கரூர், ஜூன் 26: அடிக்கடி பழுதாகி, நடு வழியிலேயே நின்று, பொதுமக்களை அவதிக்குள்ளாக்கி வரும் கரூர்- திருச்சி ரயிலின் என்ஜினை உடனடியாக மாற்ற வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர். ஜவுளி நகரமான கரூர
கரூர், ஜூன் 26: அடிக்கடி பழுதாகி, நடு வழியிலேயே நின்று, பொதுமக்களை அவதிக்குள்ளாக்கி வரும் கரூர்- திருச்சி ரயிலின் என்ஜினை உடனடியாக மாற்ற வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
ஜவுளி நகரமான கரூரின் தொழிலாளர்கள் தேவையை திருச்சி, குளித்தலை, லாலாப்பேட்டை, மாயனூர் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் நிறைவு செய்து வருகின்றனர். இந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ரயில் சேவையையே பயன்படுத்துகின்றனர்.
பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல பயன்படும் வகையிலும் பயண நேரம் அமைந்துள்ளதால், இந்த ரயிலை "ஆபிஸர்ஸ் ரயில்’ என்றே கரூர் பயணிகள் அழைக்கின்றனர்.
கரூரிலிருந்து காலை 6.50 மணிக்குப் புறப்படும் கரூர்- திருச்சி ரயில், சுமார் 2 மணி நேரத்தில் திருச்சியை அடைகிறது. பின்னர், திருச்சியிலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்பட்டு, முற்பகல் 11.30 மணிக்கு கரூரை வந்தடைகிறது.
அதைத்தொடர்ந்து, கரூரிலிருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு, மாலை 5.30 மணிக்கு திருச்சியை அடைந்து, மீண்டும் திருச்சியிலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு, இரவு 8 மணிக்கு கரூருக்கு வந்து, தனது அன்றைய பணியை முடித்துக் கொள்கிறது.
இந்த ரயில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில், பயோ-டீசல் முறையில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை திருச்சியிலுள்ள பெல் நிறுவனம் வடிவமைத்துள்ளனர்.
சோதனை முறையில் கரூர்- திருச்சி இடையே இயக்கப்பட்ட இந்த ரயில், தற்போது நிரந்தரமாக இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு வகைகளில் பயணிகளுக்கு பயன்படும் இந்த ரயில், தற்போது அடிக்கடி என்ஜின் பழுதாகி, நடுவழியிலேயே நின்று, பயணிகளை அவதிக்குள்ளாக்கி வருகிறது.
இதனால், குறித்த நேரத்துக்கு பள்ளி, கல்லூரி, அலுவலகம், தொழில்சாலைகளுக்குச் செல்ல முடியாமல் மாணவ- மாணவிகள், தொழிலாளர்கள் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 4 முறை இந்த ரயில் பழுதாகி, பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. பெல் நிறுவனத்திலிருந்து மெக்கானிக் வந்து பழுதை நீக்கிய பிறகே மீண்டும் புறப்பட்டது.
மெக்கானிக் வந்து, ரயில் என்ஜின் பழுதை சரி செய்வதற்கு நீண்ட நேரம் ஆவதால், குறித்த நேரத்துக்குச் செல்ல வேண்டிய பயணிகள், அவசர கதியில் மாற்றுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் எச். சாகுல்அமீது கூறியது:
இரட்டை என்ஜின் கொண்ட இந்த ரயில், அடிக்கடி பழுதாகி விடுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே, பழுதடைந்த என்ஜினுக்குப் பதிலாக புதிய என்ஜினைப் பொருத்தி ரயிலை இயக்க வேண்டும். இதுகுறித்து உரிய அலுவலர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கரூர் ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் எஸ். அண்ணாத்துரை கூறியது:
கரூர் ரயில் நிலையத்தில் எந்தப் பணிகளும் முறையாக நடப்பதில்லை. இதுகுறித்து போராட்டங்கள் நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. பயோ- டீசலில் இயக்கப்படும் கரூர்- திருச்சி ரயில், அடிக்கடி பழுதாகி விடுவதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நல்ல நிலையில் உள்ள ரயிலை இயக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் விடுத்தும் ரயில்வே நிர்வாகம் இதுவரை செவிசாய்க்கவில்லை. மேலும், இந்த ரயிலில் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தருமாறு கோரியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார் அவர்.