திருச்சி, மே 17:தமிழகத்தில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கியிருப்பதால், மாலை நேர மின் வெட்டு படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 16) நிலவரப்படி, 11,381 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில், 8,673 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. 2708 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக இருந்து வருகிறது.
தற்போது கடுமையாக நிலவி வரும் கோடையின் தாக்கம் காரணமாக, அதிகளவில் குளிர்சாதனக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதால், மின்சாரத் தேவை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
மின்சாரத் தேவை அதிகரித்து வருவதைப் போல, உற்பத்தி செய்யப்பட்டது போக, பற்றாக்குறையாக இருக்கும் மின்சாரத்தின் அளவும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் நீர் மின் நிலையங்களில் தற்போது மின் உற்பத்தி இல்லாத நிலையில், அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மே மாத இறுதியில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கும் என மின் வாரிய அலுவலர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், மே 14 ஆம் தேதியே காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கியிருக்கிறது. அன்றைய தினத்தில் மட்டும் காற்றாலை மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், முப்பந்தல், ஆரல்வாய்மொழி, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு உள்ளிட்ட இடங்களிலும், கோவை மாவட்டம், உடுமலை பகுதிகளிலும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் மாலை நேரத்தில் நன்றாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி இரவு நேரங்களில் சற்றுக் குறைந்தும், பகலில் மின் உற்பத்தியே இல்லாத நிலையும்தான் நிலவியது.
ஆனால், கடந்த இரு நாள்களில் மாலை நேரத்தில்கிடைத்த காற்றாலை மின் உற்பத்தியைக் காட்டிலும் இரவு நேரத்தில் மின் உற்பத்தி அதிகமாகக் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.
பகலில் மின் உற்பத்தி இல்லாமல் இருந்த நிலை மாறி, குறிப்பிட்ட அளவு மின் உற்பத்தி என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, காற்றாலை மூலம் மாலை நேரத்தில் 1,780 மெகாவாட் மின்சாரமும், நள்ளிரவில் 1,958 மெகாவாட் மின்சாரமும், திங்கள்கிழமை காலை 1,270 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு மின் வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
மே மாத இறுதியில் காற்றாலை மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், சற்று முன்னதாகவே காற்றாலை மின் உற்பத்தித் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறிதான். இனி வரக்கூடிய நாள்களில் காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால், தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குûறையும் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் மின் வாரிய அலுவலர்கள்.
மேலும், இந்த மாத இறுதியில் தென் மேற்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நீர்மின் நிலையங்களிலும் மின் உற்பத்தித் தொடங்குவற்கு அதிகளவில் வாய்ப்பு உள்ளது. இதனால், தற்போது உள்ள மின் பற்றாக்குறை மேலும் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் மின் வாரிய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
படிப்படியாக மாலை நேர மின் வெட்டு குறையும்: காற்றாலை மின் உற்பத்தி மாலை நேரங்களில் அதிகளவில்கிடைப்பதன் மூலம், அப்போதைய மின் பற்றாக்குறை குறிப்பிட்ட அளவு சரி செய்யப்படுவதால், மின் வெட்டும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, திருச்சி மாநகரில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமைகளில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை வழக்கமாக நிறுத்தப்படும் மின்சாரம் நிறுத்தப்படவில்லை.
காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவைப் பொருத்தே மின்சாரம் நிறுத்தப்படுவது முடிவு செய்யப்பட்டு, அதற்கேற்ற வகையில் நடவடிக்கை இருக்கும் என மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், காற்றாலை, நீர் மின் நிலையங்களின் மூலம் மின்சார உற்பத்தி குறிப்பிட்ட அளவு கிடைக்கத் தொடங்கினால், மாலை நேரம் மட்டுமல்லாது, பகலில் நிறுத்தப்படும் மின் வெட்டின் நேரமும் குறைக்கப்படும் எனவும் மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.