பூங்காக்கள் சீரமைக்கப்படுமா?
ஆலங்குடி, நவ. 15: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியிலுள்ள பூங்காக்களைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பூங்காக்கள் சீரமைப்புக்கென்று உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அரசு நித
ஆலங்குடி, நவ. 15: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியிலுள்ள பூங்காக்களைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பூங்காக்கள் சீரமைப்புக்கென்று உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அரசு நிதி ஒதுக்கிறது. உதாரணமாக, அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பூங்காக்களைச் சீரமைக்க ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. இதேபோல, நகர் ஊரமைப்புத் திட்டத்தின் கீழ் பூங்காக்களைச் சீரமைக்க திட்ட மதிப்பீட்டை அனுப்பிவைத்தால், ஏறத்தாழ ரூ.10 லட்சம் வரை அரசு நிதி வழங்கப்படுகிறது.
ஆனால், இத்தகைய வாய்ப்புகளையும், நிதி ஒதுக்கீடுகளையும் உள்ளாட்சி நிர்வாகங்கள் - குறிப்பாக - கிராமப்புறங்கள் - சரியாகப் பயன்படுத்துவதில்லை.
இதனால், மக்களின் பொழுதுபோக்குக்காகவும் ஊரின் அழகுக்காகவும் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள் பெரும்பாலும் புதர்க் காடுகளாகவும் சமூக விரோதிகளின் புகலிடமாகவும் காட்சி அளிக்கின்றன.
உதாரணமாக, ஆலங்குடி அருகேயுள்ள கறம்பக்குடியில் உள்ள காந்தி பூங்கா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஏறத்தாழ 5 ஏக்கரில் அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்புகூட காந்தி சிலையுடன் ஒரு பூங்காவுக்குரிய அனைத்துக் கட்டமைப்புகளுடனும் அது இருந்தது. ஆனால், முறையாகப் பராமரிக்கப்படாததால் இந்தப் பூங்கா இப்போது குப்பை கொட்டும் இடமாகவும் பொதுக் கழிப்பிடமாகவும் மாறிவிட்டது. இரவில் பலரும் மது அருந்தப் பயன்படுத்தும் இடம் இதுதான்.
ஆலங்குடியில் அமைக்கப்பட்டுள்ள காந்தி பூங்கா, கொத்தமங்கலம் ஊராட்சியில் சுதந்திரப் போராட்ட தியாகி நல்லையாவின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பூங்கா, கீரமங்கலத்தில் பேரூராட்சி நிர்வாக அலுவலர் விக்டர் தாஸ் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பூங்கா யாவும் இப்போது முறையாக பராமரிக்கப்படாததால் மிக மோசமான நிலையில் உள்ளன.
இதுகுறித்து கல்வி மற்றும் சமூக வளர்ச்சி நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. செந்தில்ராஜா கூறியது:
""இந்தப் பூங்காக்களையெல்லாம் மீண்டும் அவற்றின் பழைய நிலைக்குக் கொண்டுவர பெரிய அளவில் எந்தக் கட்டமைப்பையும் ஏற்படுத்தத் தேவையில்லை; இருப்பதைப் புனரமைத்தாலே போதும். ஆனால், உள்ளாட்சி நிர்வாகங்கள் அதைக்கூட செய்வதில்லை. இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து பூங்காக்களைச் சீரமைக்க வேண்டும்'' என்றார் அவர்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பும் இதுவே.