முகப்பு
திருச்சி

செருமாக்கநல்லூர் தலைப்பு வாய்க்கால் தூர்வாரப்படுமா?

பாபநாசம்,செப். 10: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் செருமாக்கநல்லூர் தலைப்பு வாய்க்காலைத் தூர்வாரி, பாசனத்திற்கு உடனடியாகத் தண்ணீரைத் திறந்து

Updated On : 20 செப்டம்பர், 2012 at 11:02 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 10:57 PM

பாபநாசம்,செப். 10: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் செருமாக்கநல்லூர் தலைப்பு வாய்க்காலைத் தூர்வாரி, பாசனத்திற்கு உடனடியாகத் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

  அய்யம்பேட்டை மதகடி கடைவீதிக்கு அருகே செல்லும் குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் செருமாக்கநல்லூர் தலைப்பு வாய்க்கால் அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி, கோபாலபுரம், வழுத்தூர், சரபோஜிராஜபுரம், ரயிலடி, அரியமங்கை,புரசங்காடு, வடக்குமாங்குடி, அகரமாங்குடி வழியாக செருமாக்கநல்லூர் வரை செல்கிறது.

  சுமார் 10 கி.மீ. நீளமுள்ள இந்த வாய்க்கால் மூலம்  2 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால், அண்மைக்காலமாக இந்த வாய்க்கால் தூர்வாரப்படாததால், பல இடங்களில் இந்த வாய்க்கால் தூர்ந்து பாசனத்திற்குப் பயன்படாமல் இருந்தது.

Advertisement

  இதையடுத்து, செருமாக்கநல்லூர் தலைப்பு வாய்க்கால் பிரியும் இடத்தில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.4 கோடியே 2 லட்சத்தில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே தள மட்டத் தடுப்பணை அமைத்து, செருமாக்கநல்லூர் தலைப்பு வாய்க்காலைச் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

  கடந்த மே 10-ல் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் பணிகளைத் தொடக்கிவைத்து, தற்போது பணிகள் முடிந்துள்ளன.

  ஆனால், வாய்க்காலில் சுமார் 50 மீ. நீளம் வரை மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளது. தற்போது ஆற்றில் நீர்வரத்து உள்ளதால் தூர்வாரும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாய்க்கால் கரைகளில் தனியார் ஆக்ரமிப்புகள் உள்ளதும் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

  பருவ மழை பெய்யாததாலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டதாலும், மின் பற்றாக்குறையாலும் தேவையான அளவு தண்ணீர் பாய்ச்ச இயலாத நிலை ஏற்பட்டது.

  இப்பகுதி விவசாயிகள் இந்த வாய்க்கால் மூலம் ஒரளவிற்காவது பாசன வசதி பெறலாம் என நம்பியிருந்த வேளையில், இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருப்பது அவர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

  எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் செருமாக்கநல்லூர் பாசன தலைப்பு வாய்க்காலை உடனடியாகத் தூர்வாரி, 2 ஆயிரம் ஏக்கரிலுள்ள வயல்களுக்கு பாசன வசதி செய்து தர வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.